வகுத்திடும் இலக்கணம்
ஏதுமில்லை..
நம்மிடையே கணக்கு
வழக்கொன்றும்
பெரிதாயில்லை..
நானழுதிடும் தருணங்களில்
நீ நீர்க் கொள்கிறாய்
கண்களில்...
தவறிழைக்கும் வேளையில்
கண்டித்துவிட்டு
முதுகு கன்றுமளவு
என்னிடம் வாங்கியும்
கொள்கிறாய்...
நான் பிடுங்கித்
தின்னவெனவே
ஒரு பகுதி
ஒதுக்கி வைக்கிறாய்...
டியூசனுக்கு பின்னரான
என் தாமதிக்கும் வருகையில்
உயிர் பதைக்கிறாய்...
என் அலட்சியத்திலும்
உன் பிரியம்
செழித்து வளர்க்கிறாய்...
உனக்கான என்
பிரியங்கள் பின்னொரு
நாளுக்கென
அடைகாக்கப்படுவதை
நீ அறியாமலில்லை...
உன் அன்பும்
அளவிடப்பட்டு
செலவிடப்படுவதில்லை...
நமக்கான பகிர்தல்கள்
ஆயிரம் இருக்க,
நான் அக்கா வென்றழைக்க
முயன்றதில்லை...
நீயும் கேட்க
விழைந்தததில்லை...
அன்பு குந்தானிக்கு
பிரியங்களுடன் உன்
உடன்பிறப்பு....