தோரண விளக்குகள்
கண்கூசச் செய்திட..
பஞ்சாயத்து நடந்திட்ட
ஆலமரம் அருகே
கூடி நின்ற பெரியோரையும்..
வேடிக்கை பார்த்திட்ட
ஊராரையும் சிரித்தபடியே
நான் கடக்க..
அருகே இந்திரலோகத்தில்
இந்திர சபையில்
ரம்பை ஊர்வசியின்
நடனம் அரங்கேறிக்
கொண்டிருந்தது..
அதன் எதிரே
ஊதாநிற ஆடையுடன்
இந்திய கிரிக்கெட்அணியும்
கண் கவர்ந்தது..
திடீர் திருப்பமாக
கல்யாண வீடொன்றின்
திருப்பூட்டு நிகழ்ச்சியும்
உள்ளம் நெகிழச்
செய்தது..
கண்மூடித் திரும்பிய
பொழுதில்..
அருகே உழவு வேலையோடு
விவசாய நிலமொன்று
பசுமை பொங்கிட
களைகட்டியது..
கயிற்றுக்கு அந்தப் பக்கம்
எட்டிப் பார்க்க
அகத்திய முனியோடு
முனிவர் கூட்டம்
தவக் கோலம்
கொண்டிருந்ததனர்..
மேல் வரிசையெல்லாம்
கடவுளரும்..
கீழ் வரிசையில்
வாத்தியக்காரர்களுமாய்..
அலங்கார நிலையில்
அழகிய மாதர்களுமாய்
கொலுப் படிகள்
கருத்தைக் கவர்ந்திட..
கருநிற தேகமோடு
கச்சையணிந்த
பெண்ணொருத்தி
கால் மேல் கால் போட்டு
சற்றே அதிக திமிர் கொண்ட
விழியோடு .
தலை சாய்த்து
வில்புருவம் உயர்த்தி..
குறியீடாய் ஏதோசொல்ல
நானும் ஒருமுறை
தலைசாய்த்து எனைப்
பார்த்துக் கொண்டேன்
எதிரே கண்ணாடியில்
தெரிந்த என்
நிழல் உருவத்தை!!!!