Saturday 15 December 2018

மகளுக்கு வாழ்த்து

கலர் கலராய் கோலப்பொடி
காயவைத்திருந்த ஒரு
கார்த்திகை முப்பதில்
என் பிரிய ரங்கோலி
வெளிவர யத்தனித்தது...

நான் உயிர்வலி
கொண்ட பொழுதில்
நீயும் ஜனன வலி
கண்டிருப்பாய் தானே
என் தேவதையே?!!!!

மூச்சடக்கி உனை
வெளிதள்ள ஆனமட்டுமான
என் முயற்சிகளில்
நீ பயந்துதான்
போயிருப்பாய்...

வீறிட்ட உன் அழுகை
எங்கள் புன்னகையின்
முகவரியாகியது...
என் ஜென்மபலன்
நிறைவுறச் செய்தது..

மார்கழி ஒன்றில்
ஆன்டாளே  ஜனித்ததாய்
குடும்பமே கூத்தாடியது..
பெண்ணாய் எனை
பூரணமாக்கியது...

வேலில்லை வில்லில்லை
நின்று போராடும்
போர்க்களம் என்று
எதுவுமில்லை..
எனினும்
பெண்ணாய் நீ
சந்திக்க ஆயிரம்
களமுண்டு..
உற்றதுணையாய்
நான் நிற்க..
சாதிக்க பிறந்த நீ
உலகமாள்வாய்!!!
என் பிரிய மகளே!!!