தாக்கியதென்னவோ முதுகைத்தான்
கோபமாய் பந்தை கையிலேந்தி
திரும்புகையில் நின்றவன் அவனே..
என் ஒரு வருடத்திய
மானசீகக் காதலன் ..
இதயம் தந்தி அடிக்க
கண்கள் கடிதமிட தயாரானது..
அழுத்திபிடித்த தோழியின் விரல்
என் இருப்பு, கல்லூரி என
பொட்டிலடிக்க.. வழிந்துகொண்டே
பந்தை அவனிடம் கொடுத்தேன்..
சாரி சொல்லி அவன் நகர
தாறுமாறாய் துடித்த இதயம்
என்னை மாயலோகம்
அழைத்துப் போனது
ஆம்.. நான் மயங்கிப் போனேன்!!!..
விழித்துப் பார்க்க, நான் கிடத்தபட்டிருந்ததென்னவோ
கல்லூரியின் முதலுதவி அறையில்..
சிலபல சமாதானங்கள் தீர்ந்த
நிலையில் ..அன்றிலிருந்து
நானும் அவனும் நண்பர்களானோம்..
நட்பாவது மிஞ்சட்டுமென
காதலுக்கு கல்லறைக்கட்டினேன்...
தோளுரச ,விரல்பிடிக்க,
தலைகொட்ட ,பின்னமர்த்தி
வண்டியோட்டவென அவனின்
இயல்புகள் என்னை
இயல்பில்லாமலாக்கின..
வருடங்கள் பலதொலைய
நட்பும் அவரவர் திருமணங்களில்
மீளா தூக்கத்திற்கு போயிற்று..
என் மகளுடனான ஓர் நாள்
ஷாப்பிங்கில் கிட்டியது, அவனுடனான
அந்த அதிசய எதிரபாரா ஓர் சந்திப்பு..
நல விசாரிப்பிற்குப் பின்னரான
அறிமுகத்தில் மகள் பெயராய்
என பெயரின் பின்பாதியை
அவன் சொல்ல ..
விக்கித்த எனக்குள் அவன் கண்களில்
காதல் தெரிவதாய் தோன்றுவதை
மாயமென யாரேனும் உரைத்திடுங்கள்..
இப்பிறவியில் பிழையின்றி
செத்துப் போகிறேன்!!!